ஆகஸ்ட் 15-க்குள் பிகார் முதல்வராகிறாரா தேஜஸ்வி? ஆர்ஜேடி எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

​ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தான் ஆகஸ்ட் 15-இல் பாட்னாவில் தேசியக் கொடி ஏற்றுவார் என அக்கட்சியின் எம்எல்ஏ பாய் விரேந்திரா கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தான் ஆகஸ்ட் 15-இல் பாட்னாவில் தேசியக் கொடி ஏற்றுவார் என அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான பாய் விரேந்திரா கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தது:

"ஆகஸ்ட் 15-ம் தேதி தேஜஸ்வி யாதவ் தான் தேசியக் கொடியை ஏற்றுவார். தற்போது நான் கூறியது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பாட்னா காந்தி திடலில் தேஜஸ்வி யாதவ் முதல்வராக தேசியக் கொடி ஏற்றுவார். இது உண்மையாகப் போகிறது. ஊடகங்கள் அதற்காக காத்திருக்க வேண்டும்.  

ஐக்கிய ஜனதா தளம் பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளது" என்றார் அவர். 

பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விகாஸ் ஷீல் இன்சான் மற்றும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிகளின் 8 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரச்னைகளும் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு நாள்களுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தை விகாஸ் ஷீல் இன்சால் கட்சித் தலைவர் புறக்கணித்தார்.

ஆளும் கூட்டணியில் இதுபோன்ற பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏ இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் இது உஷார்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com