தில்லி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசக்கூடாது என்ற உத்தரவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர்கள் அதிகம் பணிபுரிந்து வருகின்றனர். அந்தவகையில் தலைநகர் தில்லியில் இயங்கி வரும் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளுள் ஒன்றான கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். வழக்கமாக பணிபுரியும் இடத்தில் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் இருப்பின் அவர்களுடன் தாய்மொழியில் பேசிக்கொள்வது இயல்பு.
ஆனால், கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாளம் பேசுவதால் நோயாளிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது என்று கூறி செவிலியர்கள் மலையாளம் பேசக்கூடாது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று மருத்துவமனை உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் 'மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்; மலையாளமும் இந்திய மொழியில் அடங்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மலையாள மொழி பேசுவதற்கு தடை விதித்த தனது உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.