பிரதாப்கார்: உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில், மணமகனும், அவருடன் வந்தவரகளும் குடித்து விட்டு வந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சனிக்கிழமை இரவு திக்ரி என்ற இடத்தில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மணமகனும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் குடிபோதையில் இருந்தனர்.
திருமண நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, குடிபோதையில் இருந்த மணமகன், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் முன்னிலையில், மணமகளை தன்னுடன் நடனமாடும்படி வற்புறுத்தியிருக்கிறார். இதற்கு மணமகள் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் குடிபோதையில் தள்ளாடியதைப் பார்த்த மணமகளும், அவரது குடும்பத்தினரும் அதிர்ந்து போயினர்.
இதைப் பார்த்த மணமகள், தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதற்கு மணமகள் குடும்பத்தாரும் ஒப்புக் கொண்டுள்ளனர். குடித்துவிட்டு வந்த மணமகனால், திருமணமே நின்றுபோனது அங்கு வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.