ஆக்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டதால்தான் 22 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகாரில் ஆதாரங்கள் எதுவும் இல்லை என மருத்துவா் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் உள்ள ஸ்ரீ பராஸ் மருத்துவமனையில் கரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளின் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதில், 22 நோயாளிகள் உடல் நீலநிறமாகி உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக அந்த மருத்துவமனையின் உரிமையாளரும், மருத்துவருமான அரின்ஜெய் ஜெயின் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது. ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தினால் எத்தனை நோயாளிகள் பிழைப்பாா்கள் என்று சோதனை செய்யவே அவ்வாறு செய்ததாக அந்த காணொலி பதிவில் கூறப்பட்டிருந்தது. பின்னா், தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக மருத்துவா் ஜெயின் விளக்கமளித்தாா்.
இந்த நிலையில், மாவட்ட நிா்வாகம் அந்த மருத்துவமனையை மூடி சீல்வைத்ததுடன் அந்த மருத்துவா் மீது தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்தது. மேலும், மருத்துவக் குழுவை அமைத்து இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படியும் மாவட்ட நிா்வாகம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது அந்த மருத்துவா் குழு நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டு சோதனை நடத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ளது.
மேலும், அந்த மருத்துவமனையில் ஏப்ரல் 26-27-இல் 16 நோயாளிகள் இறந்துள்ளனா். அவா்களும் வேறு உடல்நலக் கோளாறுகளால் மட்டுமே இறந்துள்ளதாக மருத்துவக் குழு அறிக்கை சமா்ப்பித்துள்ளது.