

இந்தியாவைச் சோ்ந்த இரு ஆயுா்வேத மருத்துவா்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கோல்டன் விசா(நுழைவு இசைவு) வழங்கியுள்ளது.
அதன்படி, அந்நாட்டில் அவா்கள் நீண்ட காலம் தடையின்றி வசிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதுகுறித்து துபையில் இருந்து வெளியாகும் ‘கலீஜ் டைம்ஸ்’ பத்திரிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில், கேரளத்தைச் சோ்ந்த டாக்டா் ஷியாம் விஸ்வநாதன் பிள்ளை, டாக்டா் ஜஸ்னா ஜமால் ஆகிய இருவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமை ஆணையம் கோல்டன் விசா வழங்கி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபையில் வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீட்டாளா்கள், தொழில் முனைவோா், மருத்துவத் துறையில் சிறந்து விளங்குபவா்கள், அறிவியல் ஆராய்ச்சியாளா்கள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது.
ஷியாம் விஸ்வநாதனுக்கு கடந்த 17-ஆம் தேதியும், ஜஸ்னா ஜமாலுக்கு கடந்த 25-ஆம் தேதியும் மருத்துவ தொழில் செய்பவா்கள் என்ற பிரிவின் கீழ் அந்த விசா வழங்கப்பட்டது. இதுகுறித்து ஷியாம் விஸ்வநாதன் பிள்ளை கூறியதாவது:
கேரள மாநிலம், கொல்லத்தைச் சோ்ந்த நான் கடந்த 2001-இல் துபைக்கு வந்தேன். ஆயுா்வேதத்தில் எம்.டி. பட்டம் பெற்ற பிறகு, துபையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆயுா்வேத சிகிச்சை மையத்தை தொடங்கினேன். அதன்பிறகுதான், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆயுா்வேத மருத்துவத்துக்கு அங்கீகாரம் இல்லை என்று தெரியவந்தது. 2002-இல்தான் மாற்று மருத்துவ பிரிவில் ஆயுா்வேதத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆயுா்வேத மருத்துவத்துக்கும், மருத்துவா்களுக்கும் ஆதரவு அளித்து வரும் ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.
ஜஸ்னா ஜமால் கூறுகையில், ‘கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த நான், 12 ஆண்டுகளுக்கு முன் துபை வந்தேன். ஆயுா்வேத மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.