கேரளத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன், தான் ஐஸ்கிரீம் விற்ற இடத்திற்கு காவல்துறை அதிகாரியாக திரும்பி வந்த அனி சிவாவை(31) அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கேரள காவல்துறை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,
மன உறுதி மற்றும் நம்பிக்கையின் உண்மையான முன்மாதிரி. தனது 18 வயதில் கணவர் மற்றும் குடும்பத்தினரால் 6 மாத குழந்தையுடன் தெருக்களில் கைவிடப்பட்டு பெண், இன்று வர்கலா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக தேர்வாகியுள்ளார் எனத் தெரிவித்திருந்தனர்.
திருவனந்தபுரம், கஞ்சிரம்குளம் பகுதியில் உள்ள கேஎன்எம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது பெற்றோரின் விருப்பமின்றி தனது காதலரை திருமணம் செய்து கொண்டார் 18 வயதே நிரம்பிய அனி சிவா.
திருமணமாகி ஓராண்டில் கணவர் கைவிட, தனது பெற்றோரும் ஏற்றுக் கொள்ளாததால் 6 மாத கைக்குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.
பின், வர்கலா சுற்றுலாத் தலங்களில் ஐஸ்கிரீம், எலுமிச்சை பானம் உள்ளிட்டவை விற்றுக் கொண்டே தனது படிப்பை முடித்தார்.
அதன்பின் கேரள காவல்துறையில் 2016ஆம் ஆண்டு காவலராக தேர்வான அனி சிவா, தொடர்ந்து உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவர் ஐஸ்கிரீம் விற்ற வர்கலா பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் தற்போது உதவி ஆய்வாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உதவி ஆய்வாளர் அனி சிவா கூறியதாவது,
சில நாள்களுக்கு முன்பு தான் வர்கலா காவல் நிலையத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட தகவலை அறிந்தேன். என்னை ஆதரிக்க யாரும் இல்லாமல் எனது கைக் குழந்தையுடன் கண்ணீர் சிந்திய இடம் இது.
வர்கலா சிவகிரி ஆசிரமத்தில் உள்ள கடைகளில் எலுமிச்சை ஜூஸ், ஐஸ்கிரீம், கைவினைப் பொருள்கள் உள்பட பல சிறு தொழில்களை முயற்சித்துள்ளேன். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தது. அப்போது தான் எனது படிப்பிற்கான பணம் மற்றும் உதவிகளை செய்தார் எனத் தெரிவித்தார்.