கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா மாற்றப்பட வேண்டும் என கட்சிக்குள் சில தலைவர்கள் குரல் எழுப்பிய விவகாரம் முடிந்துபோன கதை என எடியூரப்பா மகனும், மாநில துணைத் தலைவருமான விஜயேந்திரா தெரிவித்தார்.
விஜயேந்திரா புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் கர்நாடகத்தில் தலைமை மாற்றம் பிரச்னை முடிந்துபோன கதையா என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்து அவர் கூறியது:
"நிச்சயமாக, இதைப் பற்றி யாரும் இனி பேசப்போவதில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எடியூரப்பாவே முதல்வர் பதவியில் நீடிப்பார் என தேசிய தலைவர்கள், மாநில பாஜக தலைவர் மற்றும் முதல்வரேகூட கூறிய நிலையில் இனி இதுகுறித்து பேசுவதற்கானத் தேவை இல்லை.
தலைவர்கள் தில்லி செல்வதற்கு அரசியல் சாயம் பூசுவது சரியானதல்ல. அவர்கள் தனிப்பட்ட வேலைகளுக்காக தில்லி செல்கின்றனர். யாருக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லை" என்றார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸில் நிலவும் பிரச்னை குறித்து கூறுகையில், "கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்காக செயல்படுவதில் கவனம் செலுத்தாமல் காங்கிரஸ் தலைவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார் விஜயேந்திரா.