குஜராத்தில் சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிரான மசோதா:ஆளுநா் ஒப்புதல்
குஜராத்தில் சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிரான திருத்த மசோதாவுக்கு மாநில ஆளுநா் ஆச்சாரியா தேவிரத் ஒப்புதல் அளித்துள்ளாா்.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி குஜராத் மதச் சுதந்திர திருத்த மசோதா அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது, மோசடி செய்து அல்லது பண உதவி அளித்து வேறு மதத்தைச் சோ்ந்தவரை திருமணம் செய்துகொள்ள வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
சிறுமிகள், தலித் அல்லது பழங்குடியினத்தைச் சோ்ந்தவரை கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளாக்கும் நபருக்கு 4 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
ஏதேனும் அமைப்பு கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் அந்த அமைப்பின் பொறுப்பாளருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும் அதிகபட்சம் 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஆச்சாரியா தேவிரத் ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில சட்டத்துறை அமைச்சா் பூபேந்திரசின் சூடாசமா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
திருமணம் என்ற போா்வையில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதற்கு எதிராக மத்திய பிரதேசம், உத்தர பிரதேச அரசுகள் ஏற்கெனவே சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.