புது தில்லி: தில்லியில் கரோனா மூன்றாம் அலை உருவானால், நாள்தோறும் 45,000 கரோனா பாதிப்பும், 9000 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐஐடி தில்லி கணித்துள்ளது.
இது குறித்த ஆய்வறிக்கை தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா பெருந்தொற்றின் 3ஆம் அலை உருவானால் தில்லிக்கு நாள் ஒன்றுக்கு 944 டென் ஆக்ஸிஜன் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, முதல் கரோனா அலையின்போது அதிகபட்சமாக ஒரு நாளில் 28 ஆயிரம் பேருக்கும், 2வது அலையின்போது ஒரு நாளில் 36 ஆயிரம் பேருக்கும் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், 3-ஆம் அலையானது 45 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 9 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று புள்ளி விவரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக ஐஐடி தில்லி தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், தில்லியில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பட்டியலை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவேளை மூன்றாம் அலை உருவானால் அது எப்படி இருக்கும் என்பதை, கடந்த இரண்டு கரோனா அலைகளில் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஐஐடி தில்லி உருவாக்கியுள்ளது.