புது தில்லி: தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் (எஃப்டிஏ) கீழ் இந்திய தோல் பொருள்களின் ஏற்றுமதிக்கு வரி விலக்கை அளிக்க வேண்டும் என உலக நாடுகளிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தாா்.
தேசிய ஏற்றுமதி சிறப்பு விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள்களுக்கு தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரி விலக்குகளை அளிக்க வேண்டும் என உலக நாடுகளிடம் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைகளில் இந்த விவகாரத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதன் பயனாக, இந்திய தோல் பொருள்களுக்கு இஸ்ரேல் விரைவில் வரி விலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜிசிசி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்) குழுவுடன் இதேபோன்ற பேச்சுவாா்த்தை அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்கும் என்றாா் அவா்.
ஜிசிசி குழுவில், பக்ரைன், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா மற்றும் யுஏஇ நாடுகள் உறுப்பினா்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.