உத்தரப்பிரதேச மாநலிம் குஷிநகரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், நாளை (அக்டோபர் 20ஆம் தேதி) காலை உத்தரப்பிரதேசம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு காலை 10 மணிக்கு, குஷிநகரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
பிறகு, அங்குள்ள பரிநிர்வானா கோயிலில் நடைபெறும் அபிதம்மா நாள் விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கிறார்.
மற்றும், குஷிநகரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு, முதல் விமானமாக இலங்கையின் கொழும்புவிலிருந்து வரும் பயணிகள் விமானம் தரையிறங்க உள்ளது.
குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வரும் விமானம் முதலில் தரையிறங்குகிறது.
இந்த விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தர உள்ளனர். இதில் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பும் 12 பேர் இடம் பெற்றிருப்பதுடன், புத்தரின் புனித நூல்களையும், குஷிநகரில் காட்சிப்படுத்துவற்காக எடுத்து வருகின்றனர்.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.
இந்த விமான நிலையம் அதன் அருகில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு உள்பட்ட மாவட்டங்களுக்கும் பெரிதும் பயன்படுவதுடன், அப்பகுதியில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதையும் ஊக்குவிக்கும்.