மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ள பவானிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பொறுப்பில் தொடர்வதற்கு, மம்தா இத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தேர்தல் முடிவுகள் அக்டோபர் 3ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
பவானிபூர் மட்டுமல்லாமல் மேற்குவங்கத்தில் சாம்சர்கஞ்ச், ஜங்கிப்பூர், ஒடிசாவில் பிப்லி ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா காரணமாக 31 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "அரசியலமைப்பு நெருக்கடி, மேற்குவங்கம் விடுத்த சிறப்பு கோரிக்கை காரணமாக பவானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கரோனா முன்னெச்சரிக்கையாக கடுமையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும்.
இதையும் படிக்க | தேர்தல் வன்முறை: நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மம்தா மேல்முறையீடு
சம்மந்தப்பட்ட தலைமைச் செயலாளர்கள், மாநில தேர்தல் அலுவலர்கள் ஆகியோரின் கருத்து கேட்கப்பட்டதையடுத்து 31 சட்டப்பேரவை, 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பின்னர், தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.