கர்நாடகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்த மருத்துவர் உள்பட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள எலஹங்கா பகுதியில் செயல்பட்டு வரும் செவிலியரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மூன்று கட்டங்களாக கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், நான்காவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதனிடையே கரோனாவுக்காக ரெம்டெசிவிர் மருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் மருந்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கர்நாடகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்பனை செய்து வந்த 6 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில் ஆயுர்வேத மருத்துவர், செவிலியர் போன்றோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.