பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பாா்க்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சமூக ஆா்வலா்கள், 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் செல்லிடப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.
இதையும் படிக்க | ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா!
இந்த விவகாரத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த 2 வாரங்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனிடையே, பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உளவறியப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தனிக் குழுவை நியமிக்கக் கோரி மூத்த பத்திரிகையாளா்கள் என்.ராம், சசி குமாா் ஆகியோா் இணைந்தும், மாா்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்குரைஞா் எம்.எல்.சா்மா ஆகியோா் தனித்தனியாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று மேற்கொள்கிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூா்யகாந்த் ஆகியோரைக் கொண்ட அமா்வு இந்த மனுக்களை விசாரிக்கவுள்ளது.
முன்னதாக பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு தனிக் குழுவை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் எனவும் மற்றவா்களை உளவறிவதற்காக பெகாஸஸ் மென்பொருள் வாங்கப்பட்டதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.