
கோப்புப்படம்
மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை செயலாளராக பொறுப்பு வகித்துவரும் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் அடுத்த வாரம் நிறைவுபெறும் நிலையில், அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு இன்று (வியாழன்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர்கள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய உள்துறை செயலாளராக உள்ள அஜய் குமார் பல்லாவின் பதவி காலம் ஆகஸ்ட் 22ஆம் தேதியோடு நிறைவுபெறுவதால் அவருக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அமைச்சரவையின் பணி நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கப்பட்டனரா? வெளியான பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 60 வயது நிறைவுபெற்றதை தொடர்ந்து பல்லா ஓய்வுபெறவிருந்தார். இதையடுத்து, அவருக்கு 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
1984ஆம் ஆண்டு, அசாம் - மேகாலயா பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அலுவலரான அஜய் பல்லா கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மத்திய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...