மூன்று நாள் பயணமாக கேரளம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாடு வந்துள்ளார்.
வயநாட்டில் மானந்தவாடி காந்தி பூங்காவில் சிற்பி கே.கே. ஆர். வெங்கராவால் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையை ராகுல் காந்தி திறந்துவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாத்மா காந்தியைப் பற்றிய சக்திவாய்ந்த விஷயம் என்னவென்றால், அவர் எதைச் சொன்னாலும் செயல்படுத்திவிடுவார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்று சொன்னதுடன், அவர் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டார். பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறிய அவர், பெண்களை மரியாதையுடன் நடத்தினார்.
அப்படிப்பட்ட ஒரு இந்தியா இன்று பலதரப்பட்ட மக்களைக் கொண்டிருக்கிறது. தங்களை நியாயமற்ற முறையில் நடத்துவதாகக் கூறும் நம் மக்கள் பலர் நியாயமான ஒரு நாடு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
பெண்களை மதிக்கும் இந்தியா வேண்டும் என்று கூறும் அவர்களே பெண்களை மதிக்கவில்லை . மதச்சார்பற்ற நாடு வேண்டும் என்று பேசிவிட்டு ஒவ்வொரு மதத்தையும் வெவ்வேறு விதமாக பார்க்கிறார்கள் என்று கூறினார்.