உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்து முதல்வர் பேசியது:
"சமாஜவாதி ஆட்சியின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்தனர். கடந்த 4 1/2 ஆண்டுகளில் எங்களது அரசு 4 1/2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதை யாரும் கேள்வியெழுப்ப முடியாது.
இதையும் படிக்க | நாகாலாந்து வன்முறை: இணைய சேவை முடக்கம்
முன்பு 12 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. நாங்கள் 33 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுகிறோம்.
எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கியபோது ஜாதி மிகவும் ஆழமாக வேரூன்றி இருந்தது. நாங்கள் சட்டம் ஒழுங்கைக் கொண்டு வந்து மாஃபியாவுக்கு முற்றுப் புள்ளி வைத்தோம்" என்றார் யோகி ஆதித்யநாத்.
இதனிடையே, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச அரசை விமர்சித்து கூறுகையில், "சமாஜவாதி தலைமையிலான முந்தைய அரசு மாணவர்களுக்கு மடிக் கணினிகளைக் கொடுத்தது. ஆனால், தற்போதைய அரசு தடியடியை நாடுகிறது" என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.