எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் இடைநீக்கத்தை திரும்பப் பெற தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்களை தொடர் முழுவதும் கலந்துகொள்ள தடை விதித்து மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இன்றைய பாஜக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:
எதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளோம். அவையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் நேரில் பார்த்தனர். நாடாளுமன்ற பதிவிலும் உள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டால் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றார்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக காங்கிரஸ், திரிணமூல், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.