இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் இலக்கை எட்டி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சாதனை படைத்துள்ளது. கோவிஷீல்டை மட்டுமே செலுத்தி 100 சதவிகிதம் இலக்கை எட்டிய இந்தியாவின் முதல் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேம் என்ற பெருமையை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் படைத்துள்ளது.
இதுகுறித்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கோவிஷீல்டை மட்டும் பயன்படுத்தி 100 சதவிகிதம் கரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய முதல் மாநிலம்/யூனியல் பிரதேசம் என்ற பெருமையை பெற்றுள்ளோம். உலகின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாக உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார், அசாதாரண சாதனைக்காக கடக்க முடியாத முரண்பாடுகளை முறியடித்துள்ளது" என பதிவிடப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் மற்றொரு ட்விட்டர் பதிவில், "வடக்கிலிருந்து தெற்கே 800 கிமீ தொலைவில் 836 தீவுகளில் பரந்து விரிந்து பரந்த கடல், மிகவும் அடர்ந்த காடு, மலைகள் மற்றும் சீரற்ற காலநிலை ஆகியவற்றால் பிரிக்கப்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தடுப்பூசி போடுவது மிகவும் சவாலானது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 60 லட்சம் டன்னை எட்டும்’
நாட்டின் மற்ற பகுதிகளை போலவே, அந்தமான் தீவுகளிலும் இந்தாண்டு ஜனவரி மாதம்தான் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டது. 100 சதவிகிதம் இலக்கு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "2.86 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்து வேண்டும் என்ற இலக்கை கடந்து 2.87 லட்சம் பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 100.41 சதவிகிதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தீவுகள் மக்கள் தொகையில் 74.67 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே ஒருவருக்கு கரோனா இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமையன்று 7,701 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிப்பு வளையத்தில் எடுத்தப்போது, இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.