புது தில்லி: உலக நாடுகளுக்கே இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது.
நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் இலக்கு என்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது மட்டுமல்ல, உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகும்.
நாடு முழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது.
கரோனாவால் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் இழந்துள்ளோம்.
அனைத்து சவால்களையும் இந்தியா ஒருங்கிணைந்து எதிர்கொண்டு வருகிறது. கரோனா, வெள்ளம், நிலநடுக்கம் என பல பேரிடர்களை நாம் ஒருங்கே எதிர்கொண்டு வருகிறோம்.
கரோனா காலத்தில் இந்தியர்களுக்கு என்று இல்லாமல் உலக மக்களின் நலனுக்காக இந்தியா பணியாற்றியது. சுயசார்பு முழக்கம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை கரோனா பொதுமுடக்கம் நமக்கு உணர்த்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே.. வேளாண் சட்டங்களை ரத்து செய்யப் போவதில்லை: ராம்நாத் கோவிந்த்
நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி ஏழை, எளிய மக்கள் இலவசமாக மருத்துவ வசதிகளைப் பெற்ற வருகின்றனர். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் இந்த கரோனா பேரிடர் காலத்தில் பெரும் பயன் பெற்றது. பெண்கள், ஏழைகள் என பலரும் அரசின் நலத்திட்டங்களால் பேருதவி பெற்றுள்ளனர்.
கரோனா பொதுமுடக்க காலத்திலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்தது.
கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. கரோனா காலத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பல உயிர்களை காப்பாற்றியுள்ளன. சுய சார்புடன் இருப்பதுதான் தற்போதைய இந்தியாவின் தாரக மந்திரமாக உள்ளது என்று கூறியுள்ளார்.