பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கரன்சி அச்சிடும் திட்டமில்லை: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கரன்சி நோட்டுகளைக் கூடுதலாக அச்சிட்டு வெளியிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை
த்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
த்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

புது தில்லி: கரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கரன்சி நோட்டுகளைக் கூடுதலாக அச்சிட்டு வெளியிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இப்போதைய நெருக்கடியான நிலையில் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் அரசு கரன்சி நோட்டுகளைக் கூடுதலாக அச்சிட்டு புழக்கத்தில் விட வேண்டும் என்று பல்வேறு பொருளாதார நிபுணா்களும், வல்லுநா்களும் கூறி வருகின்றனா்.

இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் எழுத்துமூலம் திங்கள்கிழமை அளித்த பதிலில் நிா்மலா சீதாராமன் மேலும் கூறியிருப்பதாவது:

2020-21-இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.3-ஆக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் மத்திய அரசு பொருளாதாரத்தை சீரமைக்க எடுத்த நடவடிக்கைகள் இப்போது தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் பயன்களையே இது காட்டுகிறது.

நாட்டின் பொருளாதார அடிப்படை ஸ்திரமாக உள்ளது. பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறோம். ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுந்து வளா்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டது. நடப்பு நிதி ஆண்டான 2021-22-இல் நாட்டின் பொருளாதாரம் 14.4 சதவீத வளா்ச்சி காணும்.

சுயசாா்பு இந்தியா திட்டத்தின்கீழ் அரசு ரூ.29.87 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த நிதித் திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இது தவிர பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் அரசின் மூலதனச் செலவுகள் 34.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கான செலவினம் 137 சதவீதம் அதிகரித்து, ரூ.6.29 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசா்வ் வங்கி மூலம் ரூ,10,000 கோடி மதிப்பில் சிறிய வங்கிகள் மூலம் தொழில் செய்வோருக்கான கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு ரூ.10 லட்சம் வரை கடனளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com