நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன், பெகாஸஸ் பிரச்னை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து காலை முதலே அவை ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய மசோதனை நிறைவேற்றிய பிறகு, நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அதேபோல், மாநிலங்களவையிலும் பெகாஸஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தொகைமீட்பு நடைமுறை (ஃபேக்டரிங்) சட்டத் திருத்த மசோதா மற்றும் தேங்காய் மேம்பாட்டு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்றி நாளை வரை அவையை ஒத்திவைத்தனர்.