கடந்த இரண்டு ஆண்டுகளில், விபத்தில் சிக்கி எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என இந்தியன் ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.
2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் ரயில் விபத்தில் சிக்கி எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை மாநிலங்களவையில் ரயில்வே துறை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
பின்னர், ரயில்வே விபத்து குறித்து பேசிய பாஜக எம்பி சுஷில் குமார் மோடி, "நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை.
2016-17 முதல் 2020-21 வரையிலான காலக் கட்டத்தில் மொத்தம் 313 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில், 239 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் ரயில் விபத்தில் சிக்கி எந்த பயணியும் உயிரிழக்கவில்லை.
இதையும் படிக்க | கரோனா தடுப்பூசி: 46 கோடியைக் கடந்தது
2016-17இல் 104 ரயில் விபத்துகள் நிகழ்ந்த நிலையில், 2017-18இல் இது 73ஆக குறைந்தது. 2018-19இல் 55 ரயில் விபத்துகளும் 2019-20இல் 22 ரயில் விபத்துகளும் நிகழ்ந்தன. 2017-18 ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தேசிய ரயில்வே பாதுகாப்பு நிதியிலிருந்து 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மனித தவறுகளால் நிகழும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் 6,218 ரயில் நிலையங்களில் இண்டர்லாக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது" என்றார்.