நாட்டில் கடந்த 63 நாள்களுக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கு கீழ் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 86,498 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் 1.14 லட்சம், நேற்று ஒரு லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூன் 8) வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, புதிதாக 86,498 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,89,96,473-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 13,03,702 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 2,123 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,51,309-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 1,82,282 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,73,41,462-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.