நாட்டு மக்கள் அனைவரும் ஒலிம்பிக்கிற்குச் செல்லும் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, தடகள ஜாம்பவான் மில்கா சிங் குறித்துப் பேசினார்.
பின்னர் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் குறித்து பேசிய அவர், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் அனைத்து விளையாட்டு வீரர்களும் நாட்டிற்கு பெருமை சேர்க்க நாம் முன்வந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
மேலும், 'மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஜாதவ் வில் அம்பு எய்துவதில் சிறந்தவர். அவரது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். இப்போது ஜாதவ் தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.
அதேபோன்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நேஹா கோயல்-இன் தாயும் சகோதரிகளும் குடும்பத்தை நடத்துவதற்காக சைக்கிள் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.
தீபிகா குமாரியின் பயணமும் ஏற்ற தாழ்வுகளால் நிறைந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வில் எய்துவதில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே பெண் தீபிகா ஆவார்.
இவ்வாறு டோக்கியோ ஒலிம்பிக்கிற்குச் செல்லும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் போராட வேண்டியிருந்தது. அவர்கள் நீண்ட காலமாக கடுமையாக உழைத்துள்ளனர். இப்போது அவர்கள் தங்களுக்காக செல்லவில்லை.நாட்டிற்கு பெருமை சேர்க்க டோக்கியோ செல்கின்றனர்.
ஒலிம்பிக்கிற்குச் செல்லும் வீரர்கள் அனைவரும் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்.
அதேநேரத்தில் விளையாட்டு வீரர்கள் மீது அழுத்தம் கொடுக்காமல் அவர்களை மக்களாகிய நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
டோக்கியோ ஒலிம்பிக் கடந்த ஆண்டு நடைபெறவிருந்தது. ஆனால் அது கரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வருகிற ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது.
சமூக ஊடகங்களில் #Cheers4India என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வீரர்கள் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.