பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய அவர் தடகள ஜாம்பவான் மில்கா சிங் உடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஒலிம்பிக் என்றால் மில்கா சிங்கை எப்படி நாம் மறக்க முடியும். சில நாள்களுக்கு முன்பாக கரோனா பெருந்தொற்று அவரை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரோடு பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
பேசிக் கொண்டிருக்கும்போது நான் அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். 1964-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற நீங்கள் வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய வீரர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றேன். அதற்கு அவரும் உடனடியாக சம்மதித்தார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவர் சம்மதம் தெரிவித்தது விளையாட்டின் மீதுள்ள அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தியது. ஆனால், விதியோ வேறு விதமாக அமைந்துவிட்டது. 2014-ம் ஆண்டு அவர் சூரத் வந்திருந்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.
மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்த நாங்கள் விளையாட்டுப் போட்டிகள் குறித்துப் பேசினோம். மில்கா சிங் அவர்களின் குடும்பம் முழுவதுமே விளையாட்டில் அர்ப்பணிப்பு உடையது. அவர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்' என்றார்.