எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமித்துள்ள உண்மையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. எல்லைப் பிரச்னையை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட பல கட்டப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாத நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நவ.29ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி
இந்நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற புதிய பொருளாதார மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா - சீனா இடையேயான உறவானது இப்போது மோசமான காலகட்டமாக உள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, “சீனா உடனான எலலைப் பிரச்னையில் சீன ஆக்கிரமிப்பு எனும் உண்மையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், அடுத்தகட்டமாக இரு தரப்பு ராணுவ அதிகாரிகளிடையேயான 14-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை விரைவில் நடத்தவும் இரு நாடுகளும் கடந்த வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.