பிரதமர் மோடி நாட்டின் தலைசிறந்த நடிகர் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படிக்க | தில்லியில் ஒரே மாதத்தில் 1000 நகை பறிப்பு சம்பவங்கள்
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் திங்கள்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி பிரதமர் மோடி தவறுதலாக அரசியலுக்குள் வந்துவிட்டதாகவும், அவர் சினிமாத்துறைக்கு சென்றிருந்தால் அனைத்து விருதுகளும் அவருக்குதான் கிடைத்திருக்கும் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டே திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவித்த ஒவைசி விவசாயிகளின் தியாகமே மத்திய அரசின் முடிவுக்கு காரணம் எனக் குறிப்பிட்டார்.