உபியில் பட்டியலின மாணவர்களிடம் தீண்டாமை: தலைமையாசிரியர் கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உணவு உண்ண வந்த தலித் மாணவர்களுக்கு தனி வரிசையை ஏற்படுத்தி தீண்டாமையைக் கடைபிடித்த பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சமூகத்தில் நிலவும் சாதி, மத வேற்றுமைகளைக் களைய முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுபவை கல்வி. ஆனால் அத்தகைய கல்வி போதிக்கப்படும் இடங்களிலேயே சாதிய அடிப்படையில் மாணவர்கள் நடத்தப்படும் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள கடேரி கிராமத்தில் பஞ்சாயத்து பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மதிய உணவிற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கென தனி வரிசையை ஏற்படுத்தி இதர சமூக மாணவர்களுடன் பழகுவதில் இருந்து பிரிக்கும் வகையில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் குசும்சோனி செயல்பட்டதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து அப்பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோர்களின் போராட்டம் காரணமாக தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அருண்குமார் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பட்டியலின மாணவர்களின் மீது தீண்டாமையைக் கடைபிடித்ததும், மாணவர்களைத் தாக்கியதும் உறுதியானதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் மாணவர்களை சாதிய அடிப்படையில் அணுகியதற்காக தலைமையாசிரியர் குசும்சோனி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.