கர்நாடகத்தில் 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் தான் எனது கடைசி தேர்தல் என்று ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் கர்நாடகத்தில் சுதந்திரமான ஆட்சியை அமைக்க மாநில மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றுள்ளார்.
முன்னாள் முதல்வரான குமாரசாமி இரு தேசிய கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இரு கட்சிகளில் இருந்தும் பிரிந்தது.
இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலே எனது கடைசி தேர்தல் என்பதால் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய அவர், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தனித்து ஆட்சி அமைக்கும் நோக்கில் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
தரமான கல்வி, ஆரோக்கியம், வீடு, விவசாயிகள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய ஐந்து அம்சங்களிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
உங்கள் ஆசிர்வாதத்தால் இரு முறை முதல்வராக பணியாற்றியுள்ளேன். நான் முதல்வராக பதவியேற்று பொறுப்பைப் பெறுவது எனக்காக அல்ல, மக்களுக்காக என்று கூறினார்.