இந்தியாவில் உயர்த்தப்பட்ட வரிகளின் மூலமே இலவச கரோனா தடுப்பூசி கொடுக்க முடிந்தது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் முறையே லிட்டருக்கு நூறைக் கடந்து விற்பனையாகி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “சாலைகள் அமைப்பது, ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவது மற்றும் பிற சமூக நலத் திட்டங்கள் போன்ற நாடு முழுவதுக்குமான வளர்ச்சித் திட்டங்களுக்கு வரி வருவாயை சார்ந்திருப்பதால் வரிகளைக் குறைப்பது என்பது சொந்தக் காலையே வெட்டுவதற்கு சமமாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் எளிமையாக, “விலைவாசி உயர்ந்துவிட்டது, வரிகளைக் குறைக்கவேண்டும் எனக் கூறும் அரசியல் நடந்துவருகிறது. சர்வதேச எண்ணைய் சந்தை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலைவாசி உயர்வுக்கு அடிப்படையாக உள்ளன" என அமைச்சர் பூரி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கரோனா பேரிடர் காலத்தில் 90 கோடி மக்களுக்கு உணவளித்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தின்கீழ் 8 கோடி ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ளோம். இவைகளெல்லாம் இந்த வரிகளின் மூலம் செய்துள்ளோம். வரிகளைக் குறைப்பது குறித்து பதிலளிக்க நான் நிதியமைச்சர் அல்ல” என மத்திய அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார்.