வேளாண் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பை விரிவாக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 8இல் கூடுகிறது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லைகளுக்கான எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பை 15 கி.மீ.லிருந்து 50 கி.மீ. ஆக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவாக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இவ்விரண்டு பிரச்னைகள் குறித்தும் கடந்த திங்கள்கிழமை பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 8ஆம் தேதி கூட்டப்படும் என முதல்வர் சரண்ஜீத் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், நவ.8ஆம் தேதிக்குள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிடில், பேரவையில் நாங்கள் ரத்து செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.