நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இளங்களை மருத்துவ நுழைவு தேர்வை இரண்டு மாணவர்களுக்கு மீண்டும் நடத்த மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த தீர்ப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இருக்க முடியாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வினா மற்றும் விடைத்தாள்களுக்கு இரு வேறு விதமான வரிசை எண்கள் வழங்கப்பட்டதாக வைஷ்ணவி போபாலி, அபிஷேக் சிவாஜி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இதில், இவர்களுக்கு புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மத்திய அரசு, தேர்வு முடிவுகளை வெளியிட தயாராக இருந்தாலும் அதை வெளியிட முடியாது எனக் கூறியது.

நீட் முடிவுகள் வெளியிட தாமதமானால், இளங்களை மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் அது பாதிப்புகளை ஏற்படுத்தும் என மேல்முறையீடு மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். என். ராவ், சஞ்சீவ் கண்ணா, பி. ஆர். கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனுவை விசாரித்துவந்தது. மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "வழக்கு தொடர்ந்த ஒரு மாணவர் 130 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

மற்றொருவர் 160 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஆனால், இதே போன்ற சிக்கலை 6 மாணவர்கள் சந்தித்துள்ளனர்" என்றார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி எல். என். ராவ், "நால்வர் இதை பிரச்னையாக கருதவில்லை. இருவருக்கு மட்டும் இது எப்படி பிரச்னையாகும். ஏன் அவர்களால் தேர்வை முடிக்க முடியவில்லை. நான்கு மாணவர்கள் 200 கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். ஆனால், மனுதாரர்களான இரண்டு மாணவர்கள் 130 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளனர்" என்றார்.

மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "அலுவலர்கள் செய்த தவறை மற்ற நான்கு மாணவர்களும் உணரவில்லை. ஆனால், இந்த இரண்டு மாணவர்கள் உணர்ந்தனர். அவர்கள் விடைகளை எழுதினாலும் அது தவறாக மதிப்பிடப்படும் என்று அவர்களுக்குத் தெரியும்" என பதில் அளித்தார்.

இறுதியாக நீதிமன்றம், "நாங்கள் நோட்டீஸை பிறப்பிக்கிறோம். உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கிறோம். நீங்கள் முடிவுகளை வெளியிடலாம். தேர்வு முடிவுகளுக்காக 16 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த 2 மாணவர்களுக்காக என்ன செய்யலாம் என்று பார்ப்போம்" என்றார்.

தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்த வழக்கின் விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com