கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக 12 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். சிறுவனின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய கிருமியியல் மையத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிறுவனுக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதியானது.
இதையடுத்து, தேசிய நோய் தடுப்பு மையத்தின் குழுவை கேரளத்திற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. மாநிலத்திற்கு இன்று வரவுள்ள அக்குழு, தேவையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீணா, "துரதிருஷ்டவசமாக, இன்று காலை 5 மணிக்கு, சிறுவன் உயிரிழந்தார். அவரின் உடல்நிலை சனிக்கிழமை இரவு கவலைக்கிடமாகவே இருந்தது. வைரஸை கண்காணிக்கும் வகையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவனிடம் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ரத்தம், மூளை தண்டுவட திரவம், எச்சில் மாதிரிகளில் வைரஸ் இருந்துள்ளது. நான்கு நாள்களுக்கு முன்பு, அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சனிக்கிழமை, இரவு அவரின் உடல்நிலை மோசமாக மாறியது. நேற்று முன்தினம் அவரின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லை. அவர்கள் அனைவரும் கண்டறிப்பட்டுள்ளனர். கவலைப்பட ஒன்றுமில்லை. சூழலை சுகாதாரத்துறை உன்னிப்பாக கவனித்துவருகிறது" என்றார். கண்ணூர், மலப்புரம் மாவட்டங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.