சூடு பிடிக்கும் பெகாஸஸ் விவகாரம்: தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைக்கும் உச்ச நீதிமன்றம் 

பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்கும் வகையில் தொழில்நுட்பு நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்கவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெகாஸஸ் மென்பொருள் மூலம் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரிக்கும் வகையில் தொழில்நுட்பு நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்கவுள்ளது. இதுகுறித்த உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வியாழக்கிழமை தெரிவித்தார்.

மற்றொரு வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெகாஸஸ் மனுதாரர் சார்பு வழக்கறிஞரான சந்தர் உதய் சிங்கிடம் ரமணா இதை தெரிவித்தார். இதுகுறித்து ரமணா மேலும் கூறுகையில், "பெகாஸஸ் விவகாரத்தில் இந்த வாரமே உத்தரவு பிறப்பிக்க விரம்புகிறோம். ஆனால், தொழில்நுட்பு நிபுணர் குழுவில் நாங்கள் இடம்பெற நினைத்த வல்லுநர்கள் தனிப்பட்ட காரணங்களால் குழுவில் இடம்பெற மறுத்துவிட்டனர். எனவே, உத்தரவை பிறப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பு குழவின் உறுப்பினர்கள் விரைவில் இறுதிசெய்யப்படுவார்கள். அடுத்த வாரம் இதில் உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்றார். இதற்கு பதிலளித்த உதய் சிங், "பெகாஸஸ் மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞரான கபில் சிபலிடம் இது தெரிவிக்கப்படும்" என்றார்.

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பெகாஸஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்து பிரமாண பத்திரிகை தாக்கல் செய்யப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி என். வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹீமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு, பெகாஸஸ் விவகாரத்தில் இடைக்கால உத்தரவை ஒத்திவைத்தது.  

பெகாஸஸ் விவகாரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் தொடர் இருப்பதால் பொதுவெளியில் இதுகுறித்து விவாதிக்க முடியாது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com