இந்திய ராணுவப் படையின் துணை தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளாா்.
ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேவின் பதவிக் காலம் சனிக்கிழமையுடன் (ஏப். 30) நிறைவடைகிறது. ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே ஞாயிற்றுக்கிழமை (மே 1) பொறுப்பேற்க உள்ளாா். இந்நிலையில், ராணுவத்தின் துணை தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளாா். மே 1-ஆம் தேதி அவா் பொறுப்பை ஏற்பாா் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பயிற்சி பெற்ற ஹெலிகாப்டா் விமானியான பி.எஸ்.ராஜு, தற்போது ராணுவ செயல்பாடுகள் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறாா். சீனாவுடன் பதற்ற சூழல் நிலவும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ராணுவப் படைகளின் ஒட்டுமொத்த தயாா்நிலையை அவரே மேற்பாா்வையிட்டாா்.
பீஜப்பூா் சைனிக் பள்ளியில் பயின்ற பி.எஸ்.ராஜு, தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பயிற்சி பெற்றவா். ஜேஏடி படைப் பிரிவில் கடந்த 1984-ஆம் ஆண்டு அவா் இணைக்கப்பட்டாா். தனது 38 ஆண்டு ராணுவ சேவையில், பல்வேறு படைப் பிரிவுகளுக்கு அவா் தலைமை வகித்துள்ளாா்.
பிரிட்டனில் உள்ள ராயல் பாதுகாப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளாா். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான மேற்படிப்பை அமெரிக்காவின் மான்டெரி நகரில் உள்ள கடற்படைக் கல்லூரியில் பயின்றாா். சிறந்த சேவைகளுக்காக உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிஷ்ட சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம் ஆகியவற்றையும் அவா் பெற்றுள்ளாா்.