இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி, இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளராக புகழ்பெற்ற அன்னா மாணியின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டுள்ளது.
கவன ஈர்ப்புச் சித்திரத்துடன், "104வது பிறந்தநாள் வாழ்த்துகள் அன்னா மாணி! நீங்கள் வாழ்நாளில் ஆற்றிய பணி இந்த உலகத்துக்கு மிக உத்வேகத்துடன் கூடிய பிரகாசமான நாள்களை அளித்தது" என்று கூகுள் பதிவிட்டுள்ளது.
இதையும் படிக்க.. ''கபாலி'யால் மன உளைச்சலில் இருந்தேன்....'' - இயக்குநர் பா.ரஞ்சித் தகவல்
கேரள மாநிலம் திருவிதாங்கூரில் 1918ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ஆம் தேதி பிறந்தவர் அன்னா மாணி. இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி என்று புகழ்பெற்றவர். இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளர். இவர் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையில் துணை இயக்குநராக பணியாற்றியவர்.
வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் அன்னா மாணியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சூரியன், காற்றின் ஆற்றல், ஓசோன் அளவீடுகள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை நடத்தி எண்ணற்ற ஆய்வேடுகளை வெளியிட்டுள்ளார்.
இயல்பியல் மீது கொண்ட ஆர்வத்தால், இயற்பியல் கற்க முடிவெடுத்தார். 1939ஆம் ஆண்டு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளநிலை அறிவியல் கௌரவ பட்டம் பெற்றார்.
1980ஆம் ஆண்டு தி ஹேன்ட்புக் ஃபார் சோலார் ரேடியேஷன் டேட்டா ஃபார் இந்தியா மற்றும் 1981ஆம் ஆண்டு சோலார் ரேடியேஷன் ஓவர் இந்தியா என்று இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.