உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இன்று தகர்க்கப்படவுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் கட்டடத்தின் முன்பு கூடி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இரட்டை கோபுரக் கட்டடத்தைச் சுற்றிலும் 500 மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், புகைப்படம் எடுக்க பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் குவிவதால், காவல் துறையினர் கட்டுப்பாட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் எமரால்ட் கோா்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்தது. அதை உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், அவ்விரு கட்டடங்களையும் இடித்துத் தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெடிவைத்துத் தரைமட்டமாக்கப்படவுள்ளது. இதற்காக 3,700 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், விடுமுறை நாளான இன்று காலை முதலே கட்டடம் அமைந்துள்ள பகுதியருகே பொதுமக்கள் குவிந்து வேடிக்கைப் பார்த்து வருகின்றனர். மேலும், சிலர் புகைப்படங்களை எடுக்க அப்பகுதிக்கு செல்கின்றனர்.
கட்டடத்தின் முன்பு அதிக அளவிலான பொதுமக்கள் குவிந்து வருவதால், காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து காவலர்களும் தடுப்புகளை அமைத்து வாகனங்கள் வராத வகையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிராக கட்டப்பட்ட இதேபோன்று 2020 ஆம் ஆண்டு கேரளத்திலுள்ள அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டன.
2014ஆம் ஆண்டு மெளலிவாக்கத்தில் 11 மாடி கட்டடங்கள் வெடி வைத்து இடிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.