ஷ்ரத்தாவின் எலும்பு கிடைத்தது: ஜாமீன் கோருகிறார் அஃப்தாப்

ஷ்ரத்தா வாக்கர் கொலையில் முக்கிய திருப்பமாக, காவல்துறை கைப்பற்றிய எலும்புகளில் ஒன்று அவரது தந்தையின் மரபணுவுடன் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஷ்ரத்தாவின் எலும்பு கிடைத்தது: ஜாமீன் கோருகிறார் அஃப்தாப்
ஷ்ரத்தாவின் எலும்பு கிடைத்தது: ஜாமீன் கோருகிறார் அஃப்தாப்

புது தில்லி: தில்லியில் கொலை செய்யப்பட்டு 35 துண்டுளாக்கி வீசப்பட்ட ஷ்ரத்தா வாக்கர் கொலையில் முக்கிய திருப்பமாக, காவல்துறை கைப்பற்றிய எலும்புகளில் ஒன்று அவரது தந்தையின் மரபணுவுடன் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் மெஸ்ரோலி வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகளில் ஒன்றுடன், ஷ்ரத்தாவின் தந்தையின் மரபணு ஒத்துப்போவதாக, நேற்று காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட மரபணு சோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ள அஃப்தாப் பூனாவாலா, தில்லியின் சாகேத் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

காவல்துறை விசாரணைக்குப் பிறகு நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தடயவியல் துறையிடமிருந்து, ஷ்ரத்தா கொலையில் முக்கிய சாட்சி கிடைத்திருக்கும் நிலையில், அஃப்தாப் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இவரது மனு சனிக்கிழமை விசாரணைக்கு வரலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் உடல் பாகங்களைத் தேடிய காவல்துறையினர், தில்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 13 எலும்புத் துண்டுகளைக் கண்டறிந்து ஆய்வுக்கு உள்படுத்தினர்.

அந்த எலும்புத் துண்டுகளின் டிஎன்ஏவும், ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏவும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டிருந்தது. இதில், மெஹ்ரௌலி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புத் துண்டின் டிஎன்ஏ, ஷ்ரத்தா வாக்கரின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போவதாக காவல்துறையினருக்கு மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் அஃப்தாப் பூனாவாலாவும், ஷ்ரத்தா வாக்கரும் (26) திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். 

இந்த நிலையில்,ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லியின் மெஹ்ரோலியில் உள்ள தனது வீட்டில் சுமாா் மூன்று வாரங்கள் குளிா்பதனப் பெட்டியில் வைத்திருந்தது, பின்னா் அவற்றை தில்லியில் பல்வேறு இடங்களில் வீசியதாகவும் அஃப்தாப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிப்பதே காவல்துறையினருக்கு கடும் சவாலாக அமைந்திருந்தது. இந்த நிலையில்தான், வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புத் துண்டின் மரபணு ஷ்ரத்தாவின் தந்தையின் மரபணுவுடன் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அஃப்தாப்பிடம் செய்யப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையின் இறுதி அறிக்கையும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஷ்ரத்தா வாக்கரைக் கொன்று, அவரது உடல்பாகங்களை தில்லியின் பல்வேறு பகுதிகளிலும் அஃப்தாப் வீசினார் என்பதை உறுதி செய்யும் வகையில், இந்த மரபணு சோதனை மிகப்பெரிய சாட்சியமாக அமைந்திருப்பதால், காவல்துறையினர் நிம்மதி அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில்தான் அஃப்தாப் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com