புது தில்லி: மக்களுக்கு செலுத்தும் தடுப்பூசியில், இரண்டு தவணைகளின் போது, கோவிஷீல்டு - கோவாக்ஸின் மருந்துகளை கலந்து செலுத்தும் முறை அதிகப் பலனை அளிக்குமா என்பது குறித்து நடந்து வரும் ஆய்வு முடிவு பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்முக தடுப்பூசியின் செயல்திறன், புதிய வகை கரோனா வைரஸ்களுக்கு எதிராக எந்த வகையில் செயலாற்றும் என்பது குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற தொற்றுநோயியல் துறை நிபுணரும், சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான, டாக்டர் ககன்தீப் காங், இந்த ஆய்வு குறித்துப் பேசுகையில், இரண்டு வகையான கரோனா தடுப்பூசிகளையும், கலந்து பொதுமக்களுக்கு செலுத்தும் போது, அது வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவது மற்றும் அதன் செயல்திறன், ஒரே வகையான தடுப்பூசியை இரண்டு தவணைகளில் செலுத்தும் போது செயல்படுவதை விட எந்த அளவுக்கு வேறுபடுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்கிறார்.
இதையும் படிக்க.. சிறுத்தைக்கு நேர்ந்த சோகம்: 2 நாள்கள், 30 பேர், இறுதியில் வெற்றி
இந்த ஆய்வில், நோய் எதிர்ப்பாற்றல் வெளிப்படும் திறனின் முதல் ஆய்வு முடிவு, பிப்ரவரி மாத இறுதியில்தான் தெரியவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆய்வின்படி, முதலில் கோவாக்ஸின் தடுப்பூசியும், பிறகு கோவிஷீல்டு தடுப்பூசியும் அல்லது முதலில் கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாம் தவணையக கோவாக்ஸின் தடுப்பூசியும் செலுத்துவதால் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் குறித்து தெரியவரும் என்றார்.
ஆரம்பகட்டத்தில், இந்த ஆய்வுக்கு தன்னார்வலர்களைத் திரட்டுவது கடினமான பணியாக இருந்தது. வேறு சில நிறுவனங்களையும் அணுகினோம். தற்போது இந்த ஆய்வு சுமார் 400 பேரிடம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.