அதிகரிக்கும் கரோனா; கெடுபிடி விதிக்கும் மேற்கு வங்கம்
மேற்கு வங்க அரசு புதிய கரோனா கட்டுப்பாட்டு விதிகளை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள், சினிமா திரையரங்குகள், உடற் பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை நாளை முதல் மூடப்படவுள்ளது.
அதேபோல, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே பிரிட்டனில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேற்குவங்கத்திலிருந்து பிரிட்டனுக்கு செல்லும் நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று, மேற்குவங்கத்தில் 4,512 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 13,300ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு பிறகு மேற்குவங்கத்தில்தான் அதிகப்படியான கரோனா பாதிப்புள்ளானவர்கள் உள்ளனர். அதேபோல், அங்கு இதுவரை மொத்தமாக 20 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.