ராய்பூர்: பல திருமணங்கள் எத்தனையோ காரணத்துக்காக, நீதிமன்றங்களில் முடிவுக்கு வந்திருக்கும். உரிய காரணமில்லாததால், பல தம்பதிகளுக்கு விவாகரத்து கிடைக்காமலும் போயிருக்கும்.
ஆனால், சட்டீஸ்கர் மாநிலத்தில், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிய கணவர் சொன்ன ஒரே காரணத்துக்காக, சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம், அவர்களுக்கு விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சேர்ந்து வாழ, சுப முகூர்த்த நேரம் வரவில்லை என்று கூறி 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு, சந்தோஷ் சிங் என்பவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதையும் படிக்க.. மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம்
அந்த மனுவில், தனக்கு ஜூலை 2010-ல் திருமணமானதாகவும் வெறும் 11 நாள்களே தன்னுடன் மனைவி வாழ்ந்ததாகவும், அதன்பிறகு, அவரது குடும்பத்தினர் வந்து மனைவியை அழைத்துச் சென்றுவிட்ட நிலையில் பல முறை தான் மனைவியை அழைத்து வரச் சென்றும் அவர்கள் சுப முகூர்த்த நேரம் வரவில்லை. தற்போது நேரம் நன்றாக இல்லை என்று கூறி மனைவியை உடன் அனுப்ப மறுத்துவந்தாகவும் கூறியிருக்கிறார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை நீடித்ததால், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதற்கு மனைவி தரப்பில் கொடுத்த பதில்தான் ஆச்சரியமே.. அவர் வந்து அழைத்த போது, நேரம் சரியில்லை என்றும், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், நல்ல நேரம் எப்போது வருகிறது என்பதைச் சொல்லி, அப்போது வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியும், அவர் அந்த நேரத்தில் வந்து அழைத்துச் செல்லவில்லை. தான் சேர்ந்து வாழத் தயாராகவே இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நல்ல நேரம் என்பது, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்கானது. ஆனால், இந்த விவகாரத்தில், சுப முகூர்த்த நேரத்தை, தனது வாழ்க்கையைத் தொடங்குவதைத் தள்ளிப்போடுவதற்காக மனைவி பயன்படுத்தியுள்ளார் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.