பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனா பரவும் விதமானது, பிரிட்டனில் புதிய கரோனா பாதிப்பு குறித்து லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் தெரிய வந்த புள்ளிவிவரத்தை ஒத்திருப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில், ஒமைக்ரான் வைரஸ் பாதித்த மூன்றில் இரண்டு பேர் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான்.
அதைப்போலவே, கர்நாடகத்திலும் மூன்றாவது அலையின்போது கரோனா பாதித்த பெரும்பாலான நோயாளிகள் ஏற்கனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற தகவல் உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்க.. செயலிழந்த நுரையீரல்; 6 மாதம் எக்மோ: மரணத்தை வென்ற முன்களப் பணியாளர்
இது குறித்து மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் மூத்த மருத்துவர் நிரஞ்சன் பட்டீல் கூறுகையில், ஆமாம், பிரிட்டனைப் போலவே கர்நாடகத்திலும் ஏற்கனவே கரோனா பாதித்தவர்களுக்குத்தான் பெரும்பாலும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும், இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தி பெற்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசி மற்றும் கரோனா பாதித்ததால் கிடைத்த எதிர்ப்புத்திறன் காரணமாக, சிலருக்கு லேசான அறிகுறி மற்றும் வெகு சில நாள்களில் அறிகுறி குறைந்துவிடுவது போன்றவை உள்ளது என்கிறார்.
மைசூருவிலிருந்து இதய நோய் மருத்துவ நிபுணரும், தூக்க மருந்து சிகிச்சை நிபுணருமான டாக்டர் சத்தியநாராயணன் கூறுகையில், நான் சில நோயாளிகளைப் பார்த்தேன். அவர்களுக்கு மூன்று கரோனா அலைகளின்போதும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்று, நகைச்சுவையாக "வழக்கமான தொற்றாளர்கள்" என்று சிரித்தபடி குறிப்பிடுகிறார்.
மேலும், ஒரு முறை கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதே இதன்மூலம் தெரிய வந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
இதன் மூலம், முதல் கரோனா அலையின்போது ஏற்பட்ட ஒரு பெரிய சித்தாந்தம் இப்போது கைவிடப்படுகிறது. அதுதான் ஒரு முறை கரோனா வந்துவிட்டால் மறுமுறை வராது என்பது. அது இரண்டாவது அலையின் போதே ஓரளவுக்கு சந்தேகத்துக்குட்படுத்தப்பட்டாலும் மூன்றாவது அலையின் போது அந்த சித்தாந்தும் முற்றிலும் கைவிடப்படுகிறது.