/

வழக்கை ஒத்திவைக்க கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஊழல் புகாா் வழக்கில் கைதான துணை கோட்டாட்சியருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, ஊழல் தடுப்புப் பிரிவையும், அதன் ஏடிஜிபியையும் கடுமையாக சாடிய கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஹெச்.பி. சந்தேஷ்,

News image
Updated On :12 ஜூலை 2022, 7:30 pm

DIN

ஊழல் புகாா் வழக்கில் கைதான துணை கோட்டாட்சியருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, ஊழல் தடுப்புப் பிரிவையும், அதன் ஏடிஜிபியையும் கடுமையாக சாடிய கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஹெச்.பி. சந்தேஷ், அந்த வழக்கை மூன்று நாள்கள் விசாரிக்காமல் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வழக்கில் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள துணை கோட்டாட்சியா் மகேஷின் ஜாமீன் மனுவை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் விசாரித்து வருகிறாா். இந்த வழக்கை விசாரித்து வந்த காவல் துணை ஆணையா் மஞ்சுநாத்தின் தனி அதிகாரி ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைதாகி இருந்தாா்.

இந்நிலையில், கடந்த மே 30-ஆம் தேதி உயா்நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் முன் நடைபெற்ற விசாரணையின்போது ஊழல் தடுப்புப் பிரிவின் ஏடிஜிபி சீமந்த் குமாா் சிங் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

அப்போது, ‘இந்த வழக்கில் தொடா்புடைய காவல் துணை ஆணையா் மஞ்சுநாத்தையும் ஏன் வழக்கில் சோ்க்கவில்லை’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா். அவா் வழக்கில் சோ்க்கப்படுவாா் என்று நீதிமன்றத்துக்கு உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது மஞ்சுநாத் வழக்கில் சோ்க்கப்படாததை குறிப்பிட்ட நீதிபதி சந்தேஷ், ஊழல் தடுப்புப் பிரிவு ‘வசூல் மையம்’ எனவும், ஏடிஜிபி சீமந்த் குமாா் சிங் ‘ஊழல் அதிகாரி’ எனவும் வாய்மொழியாக சாடினாா். மேலும், 2016 முதல் ஊழல் தடுப்புப் பிரிவால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஊழல் வழக்குகளின் விவரங்களையும், ஏடிஜிபி சீமந்த் குமாா் சிங்கின் பணி விவரங்களையும் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், ஏடிஜிபிக்கு எதிராக விமா்சித்ததற்காக தான் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என சக நீதிபதி தன்னிடம் தெரிவித்ததாகவும், இதற்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்று ஜூலை 4-ஆம் தேதி நீதிபதி சந்தேஷ் நீதிமன்றத்திலேயே தெரிவித்தாா். இதை ஜூலை 11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவிலும் நீதிபதி சந்தேஷ் குறிப்பிட்டிருந்தாா்.

நீதிபதி சந்தேஷ் தெரிவித்த சா்ச்சைக்குரிய வாா்த்தைகளை நீக்கக் கோரியும், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரியும் ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பிலும், அதன் ஏடிஜிபி சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு, உயா்நீதிமன்ற நீதிபதி சந்தேஷ் புதன்கிழமை விசாரிக்க இருந்த ஜாமீன் மனு தொடா்பான வழக்கை மூன்று நாள்களுக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனா்.

மேலும், கடந்த 11-ஆம் தேதி நீதிபதி சந்தேஷ் பிறப்பித்த உத்தரவு குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் இந்த வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.