"நீட் போன்ற பிரச்னைகளில் கலந்தாலோசிக்க கால அவகாசம் தேவைப்படும். இதற்கான ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது' என்று தமிழக அரசால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் மசோதா குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நீட் மசோதாவின் தற்போதைய நிலை, எவ்வளவு கால வரையறைக்குள் முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும் என மக்களவையில் மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்துபூர்வமாக செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில்: தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சட்ட வரைவு மசோதா 2021, கடந்த 2022, மே 2-ஆம் தேதி உள்துறை அமைச்சகத்துக்கு வந்து சேர்ந்தது.
இந்த மசோதாவில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளின் கருத்து கேட்கப்படும் முறை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை தங்களின் கருத்துகளை அளித்துவிட்டன. அவை தமிழக அரசிடம் முறையே ஜூன் -21, 27 ஆகிய தேதிகளில் பகிர்ந்துகொண்டு மேற்கொண்டு விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்னைகளில் கலந்தாலோசிக்க கால அவகாசம் எடுக்கும். இறுதி ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.