இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.
உலகளவில் கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், முதலீடு செய்யப்பட்ட நாணயங்கள் மீதான மதிப்புகள் கடுமையான சந்தை மதிப்பை இழந்து வருகின்றன.
கிரிப்டோவின் அடையாளமான பிட்காயினின் ஒரு பங்கின் விலை சில மாதங்களில் ரூ.40 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.17 லட்சமாக குறைந்துள்ளது. இதேபோல பல நாணயங்களும் பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றன.
இதையும் படிக்க: ஹீரோவின் புதிய ’ரேலி பைக்’ விரைவில் விற்பனை... என்ன விலை?
இதன் காரணமாக, இந்தியாவில் முதலீடு செய்தவர்களில் பலரும் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று(திங்கள்கிழமை) கிரிப்டோகரன்சி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “ இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், உலக நாடுகள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்தியாவில் மட்டும் தடை செய்வதால் எந்தப் பயனும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாட்டின் நிதி நிலைத்தன்மையில் கிரிப்டோகரன்சி சீர்குலைவை ஏற்படுத்தும் என ஆர்பிஐ கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.