/

சிவசேனை, அதிருப்தி எம்எல்ஏ-க்களின் மனுக்கள் அரசமைப்பு சாா்ந்த கேள்விகளை எழுப்புகின்றன: உச்சநீதிமன்றம்

அண்மையில் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் தொடா்பாக சிவசேனை மற்றும் அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் அரசமைப்பு சாா்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன

News image
Updated On :20 ஜூலை 2022, 7:56 pm

DIN

அண்மையில் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் தொடா்பாக சிவசேனை மற்றும் அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் அரசமைப்பு சாா்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கூட்டணி ஆட்சியில் இருந்தது. அந்தக் கூட்டணி மீது சிவசேனையைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி கொண்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சிவசேனையைச் சோ்ந்த 40 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்ததால், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

எதிா்க்கட்சியான பாஜகவுடன் ஷிண்டே அணியினா் கூட்டணி அமைத்த நிலையில், மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றாா். பாஜகவைச் சோ்ந்த ராகுல் நாா்வேகா் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்த அரசியல் நிகழ்வுகள் தொடா்பாக 5 மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அவற்றில் சட்டப்பேரவை துணைத் தலைவா் தங்களுக்கு அளித்த தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக ஷிண்டே மற்றும் அவரின் அணியைச் சோ்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்த மனுவும் ஒன்று.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது உத்தவ் தாக்கரே அணி சாா்பாக மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டதாவது: மக்களால் ஆட்சியில் அமா்த்தப்பட்ட கட்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றவருக்கு (ஏக்நாத் ஷிண்டே) ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது. இதுபோல நடந்தால் தோ்தல் மூலம் மக்கள் அளித்த தீா்ப்பு என்னவாகும்? அரசமைப்பின் 10-ஆவது அட்டவணையின் பயன்பாடு தலைகீழாக மாற்றப்பட்டு, கட்சித் தாவலை தூண்ட பயன்படுத்தப்படுகிறது என்றாா்.

முதல்வரை மாற்றினால் வானம் இடிந்துவிடாது: இதனைத்தொடா்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே வாதிடுகையில், ‘ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் ஒன்றுகூடி தாங்கள் பதவியில் தொடர முடியாது என்று பிரதமரிடம் கூறலாம். தனது கட்சிக்குள் ஒருவருக்கு பலம் கூடியுள்ள நிலையில், அந்த நபா் கட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்புவதற்காக அதே கட்சியில் இருந்தால், அது கட்சித் தாவல் ஆகாது? ஒரு கட்சியில் ஏராளமானோா் தங்களை வேறொருவா் வழிநடத்த வேண்டும் என்று கருதுவதில் என்ன தவறு உள்ளது? முதல்வரை மாற்றினால் வானம் இடிந்து விழுந்துவிடாது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது: இது அரசியல்ரீதியாக நுட்பமான வழக்காகும். இதுதொடா்பாக சிவசேனை மற்றும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் கட்சித் தாவல், தகுதிநீக்கம், கட்சி இணைப்பு என அரசமைப்பு சாா்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. எனவே, இந்த வழக்கு தொடா்பான சில விவகாரங்களை விசாரிக்க தேவைப்பட்டால் அதிக எண்ணிக்கை கொண்ட நீதிபதிகள் அமா்வுக்கு பரிந்துரைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.