குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 24) நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மு நாளை (ஜூலை 25) பதவியேற்கவுள்ளார்.
இன்றுடன் தனது பதவிக் காலம் முடிவடையவுள்ளதையொட்டி இன்று மாலை 7 மணியளவில் நாட்டு மக்களுடன் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.
ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் இடம்பெறவுள்ள அவருடைய உரை, அகில இந்திய வானொலி, தூா்தா்ஷன் ஆகியவற்றின் அனைத்து அலைவரிசையிலும் ஒலிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திரெளபதி முர்மு 64 சதவிகித வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார்.