இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 4,484 விசாரணைக் கைதிகள் உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
அதில், கடந்த ஓர் ஆண்டில் நாடு முழுவதும் காவல்துறையினரால் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 2,544 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 501 பேர் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழப்பு: மத்திய அரசு
மேலும், 2020-2021 ஆம் ஆண்டில் 1,940 விசாரணைக் கைதிகள் உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டான 2021-2022 இல் உயிரிழப்பு எண்ணிக்கை 2,544 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 2020-2021 ஆண்டில் 63 பேரும், 2021 - 2022 இல் 109 பேரும் விசாரணையின்போது உயிரிழந்தாகவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.