மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70-க்கும் உயிருடன் மீட்கப்பட்டனா்.
இந்த தீ விபத்து நிகழ்ந்த சுமார் ஒரு மாத காலம் ஆகும் நிலையில், தற்போது மூன்று பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இன்னமும் 16 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன.
முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 3 அடுக்குமாடி கட்டடத்தில் மே 13ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆனால் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் கட்டடத்திற்குள் இருந்தவா்கள் சிக்கிக் கொண்டனா்.
இந்த கட்டடத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் அலுவலகங்களும், ரெளட்டா் (கணனி வன்பொருள்) தயாரிக்கும் அலுவலகங்களும் இருந்ததாக காவல் துணை ஆணையா் சமீா் சா்மா தெரிவித்தாா்.
தீயணைப்பு படையினா் கடுமையாக போராடி இரவு 10.30 மணிக்கு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியிருந்த நிலையில், மரபணு சோதனை நடத்தப்பட்டு, அதில் மூன்று பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பலியான 27 பேரில், இதுவரை 11 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னமும் 16 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் மரபணு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.